Header Ads

10 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் மாயமான இரிடியம்! - தூத்துக்குடியில் சிக்கியது எப்படி?


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பான டி.ஆர்.டி.ஓவிலிருந்து மாயமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் தூத்துக்குடியில் மீட்கப்பட்டுள்ளது. இக்கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜப்பானைத் தாயகமாக கொண்ட ஜே.வி.சி நிறுவனம், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த டி.ஆர்.டி.ஓ நிறுவனத்திடம் இரிடியம் தனிமத்தை வணிக ரீதியாக பெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு ஜே.வி.சி நிறுவனம், மும்பையில் உள்ள டி.ஆர்.டி.ஓ அமைப்பிடம் இரிடியம் ஆர்டர் செய்திருந்தது. தொடர்ந்து, மும்பையில் இருந்து ஜப்பானுக்கு இரிடியம் பெட்டிகளை அனுப்பும்போது அதிலிருந்து 10 பெட்டிகள் மாயமானது. இதுகுறித்து மும்பை நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 144 மி.கி இரிடியம்

திருடுபோன இரிடியம் பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் தலா 6 இரிடியம் குழாய்கள் வைக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் திருடுபோன 10 இரிடியம் பெட்டிகளில் 3 பெட்டிகள் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சுவாமிநாதன் என்பவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.

கள்ளச்சந்தையில் இரிடியத்திற்கு விலை அதிகம் என்பதால் அதை விற்பதற்காக தஞ்சாவூரைச் சேர்ந்த வைத்திலிங்கம் என்பவரிடம் ஒரு இரிடியம் பெட்டியை கொடுத்துள்ளார் சுவாமிநாதன். இதை எடுத்துக் கொண்டு சுவாமிநாதன் அவருடைய நண்பரான முத்துராமலிங்கத்துடன் இனோவா காரில் (பதிவெண்: TN59 BB-0909) தூத்துக்குடிக்கு வந்துள்ளார். தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதியம்புத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர்.

தூத்துக்குடியை சேர்ந்த தங்கம், மரியதாஸ், முருகன் ஆகியோர் கள்ளச்சந்தையில் இரிடியத்தை வாங்குவதற்காக விடுதிக்குச் சென்றனர். இது குறித்த ரகசிய தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீஸார், விடுதிக்குச் சென்று இரிடியம் கடத்தலில் ஈடுபட்ட வைத்தியலிங்கம், முத்துராமலிங்கம், தங்கம், மரியதாஸ், முருகன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த 6 இரிடியம் குழாய்கள் அடங்கிய பெட்டியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்தயப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இரிடியத்தின் மொத்த எடை 144 மில்லி கிராம் ஆகும். காரில் சோதனை செய்ததில் அதிலிருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. வைத்தியலிங்கத்திடம் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், ”சுவாமிநாதனுக்கு கிடைத்த 3 இரிடியம் பெட்டிகளில் ஒன்று திருச்சியிலும், மற்றொன்று நெய்வேலியிலும், மற்றொன்று தன்னிடமும் கொடுக்கப்பட்டது” எனக்கூறியுள்ளார்.

இதையடுத்து இரிடியம் கடத்தலில் ஈடுபட்ட சுவாமிநாதன் மற்றும் அவருடைய கூட்டாளிகளை கைது செய்ய போலீசார் திருச்சி மற்றும் நெய்வேலிக்கு விரைந்துள்ளனர். அவர்களை கைது செய்த பிறகே இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்த விவரம் தெரியவரும் என போலீஸார் கூறியுள்ளனர்

No comments

Powered by Blogger.