துரைமுருகன் என்றால் கனிவு! டி.ஆர்.பாலு என்றால் கண்டிப்பு! - ஒன்றிணைந்து கழகப் பணி ஆற்றுவோம்! வெற்றி பெறுவோம்!! வெற்றி நமதே!!!

✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
துரைமுருகன் என்றால் கனிவு! டி.ஆர்.பாலு என்றால் கண்டிப்பு! இந்தக் கனிவும் கண்டிப்பும் கழக வளர்ச்சிக்குப் பயன்படட்டும்!
ஒன்றிணைந்து கழகப் பணி ஆற்றுவோம்! வெற்றி பெறுவோம்!! வெற்றி நமதே!!! - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்.
திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுக் கூட்டம், இன்று (9.9.2020) சென்னை - அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கில்" கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது.
இடைவிடாது 5 மணி நேரம் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் நிறைவாக, கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், கழகத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. துரைமுருகன் அவர்களையும் - பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. டி.ஆர்.பாலு அவர்களையும் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட முனைவர் க.பொன்முடி, ஆ.இராசா ஆகியோரையும் வாழ்த்தி உணர்ச்சி மிகு உரையாற்றினார்.
பொதுக்குழுவில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயமாக இருக்கக் கூடிய பொதுக்குழு உறுப்பினர்களால், கழகத்தின் அதிகாரம் மிகுந்த பொதுச்செயலாளர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, என்னுடைய அன்புச் சகோதரர் - அண்ணன் துரைமுருகன் அவர்களே! கழகத்தின் அதிகாரம் மிகுந்த பொருளாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள - என்னுடைய அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களே!
தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்களே! துணைப் பொதுச் செயலாளர்கள் திண்டுக்கல் ஐ.பெரியசாமி அவர்களே! சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களே! அந்தியூர் செல்வராஜ் அவர்களே! - இன்று துணைப் பொதுச்செயலாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள முனைவர் பொன்முடி அவர்களே! சகோதரர் ஆ.ராசா அவர்களே! - அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே! செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே! மகளிர் அணியின் செயலாளர் – நாடாளுமன்றக் கழகக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி அவர்களே! இளைஞரணியின் செயலாளர் உதயநிதி அவர்களே! உடல்நலிவுற்ற நேரத்திலும், நான் வாழ்த்த வருகைத் தருகிறேன் என மனமுவந்து என்னிடம் தொலைபேசியில் தெரிவித்துவிட்டு, இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த அரங்கத்து வந்தமர்ந்து புதிதாக தேர்வுசெய்யப்பட்டிருப்பவர்களை வாழ்த்தி விடைபெற்றிருக்கும் ஆர்க்காட்டார் அவர்களே! தலைமைக் கழக நிர்வாகிகளே! மாவட்டக் கழகச் செயலாளர்களே! பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்களே – செயலாளர்களே - நிர்வாகிகளே! பொதுக்குழு உறுப்பினர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
புதிய பொதுச் செயலாளரையும் பொருளாளரையும் தேர்ந்தெடுக்கக் கூடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பொதுக்குழுவை பிரமாண்டமாக ஒரு மாநாடு போல் இந்த அரங்கில் நடத்துவதற்குப் பதிலாக; நாம் அனைவரும் ஒரே இடத்தில், கூட இயலாத சூழ்நிலையைக் கொரோனா ஏற்படுத்தி விட்டது.
3500 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரே இடத்தில் கூடும் சூழ்நிலை எந்த மாதத்தில் ஏற்படுமோ என்பது தெரியாத நிலையில், காணொலிக் காட்சி மூலமாக பொதுக்குழுவை நடத்திக் கொண்டு இருக்கிறோம். மார்ச் 29-ம் தேதியன்று இந்தப் பொதுக்குழு கூடியிருக்க வேண்டும்.
கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், ஐந்து மாதங்கள் கழித்து இந்தப் பொதுக்குழு கூடுகிறது. ஊரடங்கு என்பதை ஒருவார காலம் கழித்து அறிவித்து இருந்தால், அண்ணன் துரைமுருகன் அவர்கள் மார்ச் மாதமே பொதுச்செயலாளராகவும், அண்ணன் பாலு அவர்கள் பொருளாளராகவும் ஆகி இருப்பார்கள்.
இந்த ஊரடங்கு சூழ்நிலையை உணராத ஊடகங்கள்; உணர்ந்தாலும் - அதை மறைத்துவிட்டு, ஏராளமான கற்பனைக் கதைகளை இந்த ஐந்து மாத காலம் எழுதிக் கொண்டு இருந்தார்கள்.
தி.மு.க.,வின் பொதுக்குழுவில் இடம்பெறாத அந்த உறுப்பினர்கள், தி.மு.க. மீது எவ்வளவு அக்கறையாக, ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து உண்மையில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச்செயலாளருக்குப் போட்டி - பொருளாளர் பதவிக்குப் போட்டி - என்று செய்திகளை வெளியிட்டு, அவர்கள் தங்களைத் தாங்களே சொறிந்து கொண்டார்கள்.
பொதுவாக ஊடகங்கள்; யார் ஆளும்கட்சியோ அவர்களைத்தான் அதிகமாக எழுதுவார்கள், விமர்சிப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டு ஊடகங்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாருக்காவது தும்மல் வந்தால் - இருமல் வந்தால் - அதனைப் பூதாகாரமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், உண்மையில் தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருப்பது திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்று தமிழ்நாட்டு ஊடகங்கள் நினைக்கின்றன.
அவர்கள் ஆசை இன்னும் எட்டு மாதத்தில் நிறைவேறிவிடும் என்பதை இந்தப் பொதுக்குழுவின் வாயிலாகச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்!
என்றும் இல்லாத அளவுக்கு இன்று நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய பொதுச் செயலாளராக அண்ணன் துரைமுருகன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய பொருளாளராக அண்ணன் டி.ஆர்.பாலு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
பொதுக்குழு உறுப்பினர்களான 3500 பேரால் மட்டுமல்ல; இலட்சக்கணக்கான தொண்டர்களின் மூலமாக, புதிய பொதுச்செயலாளரும் - புதிய பொருளாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
அண்ணன் துரைமுருகன் அவர்களாக இருந்தாலும், அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் பொறுப்பு வேண்டுமானால் புதியதாக இருக்கலாம்; ஆனால் கழகத்துக்கு - எங்களுக்கு நீங்கள் இருவரும் புதியவர்கள் அல்ல; நெடுங்காலம் பழகிய முகங்கள். எங்களில் இருவர்தான் நீங்கள்!
உங்கள் இருவரையும் இளைஞர்களாக நான் முதலில் பார்த்தேன். இன்றைக்குப் பொதுச் செயலாளராகவும் பொருளாளராகவும் பார்க்கிறேன். அதுவும் தலைவராக இருந்து பார்க்கிறேன்.
உங்களைப் பார்க்கும் போது, எனக்கு, உங்கள் முகம் தெரியவில்லை. நம்மை எல்லாம் ஆளாக்கிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான் தெரிகிறார்! அவரில்லாமல் நாம் மூன்று பேரும் இல்லை! ஏன், யாருமே இல்லை!
நம்மை இந்தப் பொறுப்புகளில் அமர வைத்துவிட்டு, வங்கக் கடலோரம் ஓய்வு கொண்டிருக்கிறார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
இந்த இயக்கத்துக்கு அண்ணன் துரைமுருகன் பொதுச்செயலாளர் - இந்த இயக்கத்துக்கு அண்ணன் டி.ஆர்.பாலு பொருளாளர் - என்பதை விட, தலைவர் கலைஞர் அவர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய வேறு ஒரு செய்தி இருக்க முடியாது!
அண்ணன் துரைமுருகன் அவர்களாக இருந்தாலும், அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களாக இருந்தாலும் - திடீரென்று இந்த உயரத்தை எட்டிவிடவில்லை.
நான் எப்படி படிப்படியாக வளர்ந்து வந்தேனோ - அதைப் போலவே அவர்களும் படிப்படியாக வளர்ந்து இந்த உயரத்தை எட்டி இருக்கிறார்கள்.
அண்ணன் துரைமுருகன் அவர்கள் பிறந்த கே.வி.குப்பம் ஊருக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் வருகிறார்கள்; அப்போது ஒரு வீட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தங்கியிருக்கிறார். அந்த வீட்டின் ஜன்னல் வழியாக பேரறிஞர் அண்ணா அவர்களை அண்ணன் துரைமுருகன் அவர்கள் எட்டிப் பார்த்திருக்கிறார்.
அன்று, பேரறிஞர் அண்ணா அவர்களை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த துரைமுருகன் அவர்கள் தான் - இன்றைய தினம் பேரறிஞர் அண்ணா அவர்கள் வகித்த பொதுச்செயலாளர் பதவிக்கு வந்திருக்கிறார்.
அதேபோல் நாவலர் அவர்களது உரையை, ஒரு ஊரில் கேட்டபிறகுதான், தனக்கு கழக ஈடுபாடு அதிகமாக ஏற்பட்டதாக அண்ணன் துரைமுருகன் அவர்கள் ஒரு முறை சொன்னார்கள். அப்படிப்பட்ட அண்ணன் துரைமுருகன் அவர்கள்தான், இன்றைக்கு நாவலர் வகித்த பொதுச்செயலாளர் பதவியை அடைந்திருக்கிறார்.
பேராசிரியர் அவர்களின் பேச்சு எனக்கு அதிகம் பிடிக்கும் என்று அண்ணன் துரைமுருகன் சொல்லி இருக்கிறார். அத்தகைய பேராசிரியர் வகித்த பொதுச்செயலாளர் பதவியை இன்றைக்கு அண்ணன் துரைமுருகன் அவர்கள் அடைந்திருக்கிறார். அண்ணன் துரைமுருகன் அடைந்திருக்கிறார் என்றால் - அந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்!
இதில் எனக்கு என்ன பெருமை என்றால் - நான் தலைவராக இருக்கும் போது, அவர் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறார் என்பது, தனிப்பட்ட எனக்குக் கிடைத்த பெருமை!

(பொருளாளர் டி ஆர் பாலு அவர்களுக்குப் பூங்கொத்து வழங்கி வாழ்த்துப் பெறுகிறார், இளைஞரணிச் செயலாளர் !)
No comments