Header Ads

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம்


✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

சென்னை:கொரோனா தொற்று தமிழகத்தில் வேகமாக பரவ தொடங்கிய நேரத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக நேரில் சென்று கலெக்டர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி, தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனைகளையும் வழங்கினார். அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.பல்வேறு மாவட்டங்களை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்ல இருந்தநிலையில், அவரது தாயார் காலமானார். இதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் ஆய்வு கூட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார்.இந்தநிலையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நடக்கும் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை புறப்பட உள்ளார்.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நாளையும் (புதன்கிழமை) அவர் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளார். இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 7.45 மணிக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு, 8.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.அங்கிருந்து 8.35 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு காலை 10.25 மணிக்கு சென்றடைகிறார். அங்கிருந்து நாகர்கோவிலில் உள்ள சர்க்யூட் ஹவுசுக்கு பகல் 12 மணிக்கு செல்கிறார். பின்னர் 2.30 மணியளவில் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி கலெக்டர் அலுவலக ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் அவர் விவாதிக்கிறார்.அதனைத்தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் தொழில் முனைவோர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்தாய்வு நடத்துகிறார். பின்னர் 5 மணியளவில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார். நாகர்கோவில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, மாலை 6.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வருகிறார்.

தூத்துக்குடியில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ‘லீனியர் அக்சிலரேட்டர்’ பயன்பாட்டை தொடங்கி வைக்கிறார். பின்னர் 9.15 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். மதியம் 1 மணியளவில் சாலை மார்க்கமாக விருதுநகருக்கு புறப்பட்டு செல்கிறார். பகல் 2.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.2 நாள் நிகழ்வுகளையும் முடித்துக்கொண்டு மாலை 6.15 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்படுகிறார். இரவு 8 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேராக கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

No comments

Powered by Blogger.