Header Ads

புதிய வகை கொரோனா.! யாரை குறிவைத்து தாக்கும்? உயிருக்கு ஆபத்தா?


இங்கிலாந்தை உலுக்கும் புதிய வகை கொரோனா வைரஸ், பெருந்தொற்று அலையடித்து ஓய்ந்திருந்த உலக நாடுகளை மீண்டும் பீதிக்குள்ளாக்கியுள்ளது. 


அந்த புதிய வகை வைரஸ் குறித்தும், அதன் தாக்கம் குறித்தும், கொரோனா தடுப்பூசி மூலம் தடுக்க இயலுமா என்பது பற்றியும் இப்போது பார்க்கலாம்...

இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ், தனது அடிப்படையான மரபியல் கூறுகளின் கட்டமைப்பில் இருந்து மாற்றம் பெற்றுள்ளது. 

பந்துபோன்ற உருவத்துடன் கூடிய கொரோனா வைரஸ் தோற்றத்தில், கொம்புகள் போன்று தனித்தனியாக இருக்கும், ஸ்பைக்சில் தான், அந்த மரபியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

மனித உடலில் எப்படி கை-கால் அடங்கிய உடல்பாகமோ, அதுபோன்றாதாகவே, இந்த கொரோனா வைரஸ் தோற்றத்தின் ஸ்பைக்ஸ் வர்ணிக்கப்படுகிறது. இந்த ஸ்பைக்ஸ் ஜீன் தான், கொரோனா வைரஸ், மனித உடலில், படிந்து, ஒட்டிக் கொண்டு, உடல் உறுப்புகளின் செல்கள் மூலம் பரவ மிக முக்கிய பங்காற்றுகிறது.

தற்போது புதிய வகை கொரோனா வைரசில், மரபியல் மாற்றம் அடைந்துள்ள ஸ்பைக்ஸ் ஜீன், மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி திறனில் இருந்து மறைந்து கொள்ளும் வகையில், உருமாற்றம் அடைந்திருப்பதாக, இங்கிலாந்து மருத்துவ அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாற்றத்தை தான், ஆங்கிலத்தில் Mutation என்றும், புதிய பரிணாமம் என்றும் குறிப்பிடுகின்றனர். 

இருப்பினும், ஏற்கனவே உள்ள கொரோனா வைரஸ், தனது தோற்றத்தில் முழுமையாக மாறவில்லை என்கிறது மருத்துவ உலகம்.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ், முந்தைய பெருந்தொற்றை விட 70 சதவிகிதம் அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக திகழ்வதாக, மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சேகரிக்க, புனேவில் உள்ள தேசிய வைராலாஜி மையம் தீவிரம் காட்டி வருகிறது. 

இந்த புதிய வகை கொரோனா வைரசின் பரவல் மற்றும் தாக்கத்தின் வேகம் அதிகம் உள்ளதாக, இங்கிலாந்து மருத்துவ ஆய்வாளர்கள் கூறினாலும், அதற்கு போதிய தரவுகள் இல்லை என இந்திய வைராலாஜி மற்றும் தொற்று நோய் நிபுணர்கள் மறுக்கின்றனர்.

மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவது உட்பட ஏற்கனவே உள்ள நோய் தடுப்பு விதிமுறைகளே போதுமானது என்று கூறும், மருத்துவ நிபுணர்கள், இந்தியாவில் பரவுவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என்கின்றனர்.

தற்போது, கண்டறியப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளே, இந்த புதிய வகை கொரோனா வைரசை கட்டுப்படுத்தி, தடுக்கும் என்றும், மருத்துவ நிபணர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். 

இந்த புதிய வகை கொரோனா வைரசால், உயிரிழப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக, மிக குறைவு என்ற மத்திய அரசின் தகவலும், நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.